பிறவா குழந்தையும் பசிக்கு
அழுகிறது.தாயின் கர்பத்திலேயே
பார்வை இழக்கிறது.
காணும் இடமெல்லாம் கணிப்பொறி.
கூப்பிடு தூரத்திலிருப்பினும் கைப்பேசி.
குறுந்தட்டில் குறள் பயிலும் சிறுவர்.
காலம் மாறித்தான் போனது
குழந்தைகள் கிறுக்கிப் பார்க்க
காகிதம் தீர்ந்தது.
சிறுதானியம் தின்று
செழித்திருந்தது போய்
உண்ணும் உணவில்
உடலும் மனமும் பலவீனப்பட
பல மருந்துகள்.
வேண்டுமென்று எடுக்கவும் முடியாமல்
வேண்டாமென்று ஒதுக்கவும் முடியாமல்
வாழ வழியின்றி தவிப்போரும்
வாழ விருப்பின்றி திரிவோரும்
வாழ்ந்தும் வாழாமலுமாக திசைமாறினோரும்
வாழ்ந்தே ஆகவேண்டுமென துடிப்போரும்
அப்பப்பா
வாழ்க்கையெனும் இப்பாடம்
பயில பயில
இருப்பதைக்கொண்டு
இருப்பு நிலையடைந்து
இறப்பு நிலை மறந்து
என்னென்னவொ எண்ணங்களை
நினைத்துக்கொண்டிருக்கயிலே..
என்ன தான் சிந்திக்கின்றன
இங்கு நான் பார்க்கும் இந்த
மக்காத குப்பையைத் தின்னும்
இந்த மாடுகள்
பஞ்சகவ்யம் பாழாய்ப்போனது
ப்ளாஸ்டிக் உரமானது.அதுவே
இதன் உணவும் ஆனது..
வாழ்வெனும் பாடம்
அறுஞ்சுவைதான் - நினைவில் மெல்ல
மென்று அசைபோட.
கறவை தீர்ந்த பசுக்கள் அல்ல...
ப்ளாஸ்டிக் தின்றேனும்
பால் புகட்டும்
கோ மாதாக்கள்.